Showing posts with label சொன்னார்கள்.... Show all posts
Showing posts with label சொன்னார்கள்.... Show all posts

Tuesday, July 29, 2008

செல்வந்தரும் சந்நியாசியும்...


ஒரு மிகப்பெரிய செல்வந்தரும் ஒரு சந்நியாசியும் காரில் பயணமானார்கள்.செல்வந்தருக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாய் இருந்தது சந்நியாசியுடன் பயணம் செய்வது.தன் மனதில் இருந்த குறைகளையும் ஆன்மீகம் சம்பந்தமாக தனக்கு இருந்த சந்தேகங்களையும் சந்நியாசியிடம் கேட்டுக்கொண்டே வந்ததார். சந்நியாசியும் பொறுமையாக பதிலளித்துக்கொண்டே வந்தார்.


ஒரு திருப்பத்தில் கார் எரிபொருள் இல்லாமல் நின்று விட்டது. செல்வந்தரோ கடினமான வேலைகள் எதுவும் செய்து பழகாதவர். சந்நியாசி கொஞ்சமும் சங்கோஜ படாமல் அய்யா செல்வந்தரே நீங்கள் இங்கேயே இருங்கள் நான் சென்று பக்கத்தில் யாராவது உதவிக்கு கிடைப்பார்களா? என்று பார்த்து வருகிறேன் என்று கூறிவிட்டு டிக்கியை திறந்து கேனை எடுத்துக்கொண்டு சென்றார்.


அந்த இடமோ ஆள் நடமாட்டமே இல்லாத இடமாக இருந்தது. அடிக்கடி வாகனப்போக்குவரத்தும் அங்கே காணப்படவில்லை.


எப்பொழுதும் தன்னைச் சுற்றி குடும்பம், நண்பர்கள், துதி பாடுபவர்கள் என்றே பழக்கப்பட்டிருந்த செல்வந்தருக்கு முப்பதே நிமிட தனிமை வாழ்வைப்பற்றிய பயத்தைஅவரிடம் ஏற்படுத்தியிருந்தது.


முப்பது நிமிடங்கள் கழித்து வேர்வை வழிய சந்நியாசி எரிபொருளுடன் அந்த இடத்திற்கு வந்தார்.


அவரைப்பார்த்ததும் செல்வந்தர் சாமி என்னால் ஒரு அரை மணி நேரம் யாருமில்லாமல் தனிமையில் இருந்தது மிகவும் கொடுமையாய் இருந்தது.மனதில் தேவையில்லாத கற்பனைகள் எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. யாரும் பேச்சு துணைக்கு கூட இல்லாமல்,ஒரு வேலையும் இல்லாமல் சும்மா இருப்பது இவ்வளவு கடினமானதா? என்று வினவினார்.


புன் சிரிப்புடன் சந்நியாசி, அய்யா செல்வந்தரே உன் தொழிலில் உள்ள சிரமங்களையும், வேலைகளையும் நித்தம் செய்து உங்கள் மனதை பழக்கப்படுத்தியுள்ளீர்கள்.உண்மையில் அந்த வேலைகள்தான் கடினமானவை. ஆனால் உள்முகமாக மனதை திருப்பி தனிமையில் தன்னை உணர்வது நீ செய்து கொண்டிருக்கும் வேலையைவிட கடினமானது அல்ல.


ஆர்வமும் முனைப்பும் இருந்தால் இப்பயிற்சி மிக எளிதாய் வசப்படும் .மேலும் தனிமை இனிமையானதாய் மாறும். உன்னுடைய இந்த பயிற்சி எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தைக்கொடுக்கும். யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனது பாதிக்காது. இடைவிடாது, இடையூறு இல்லாமல் என்றுமே கிடைக்கும் இந்த ஆனந்தமும், மகிழ்ச்சியும் உனக்குள்ளேயே இருக்கிறது.


அதற்கு


தனித்திரு... விழித்திரு.


இதிலிருந்து தெரிந்துகொண்ட விசயம்

கஷ்டமான வேலைகளை எளிதாகச் செய்கிறோம்,எளிதான வேலைகளை கஷ்டமாக்குகிறோம். நம்முள்ளேயே இருக்கும் மகிழ்ச்சியை வெளியில் தேடுகிறோம்.(இதை பிளாக்கில் பதிவது உட்பட)


நேற்று இரவு சுமார் 11 மணியளவில் நண்பர் பாலபாரதி மற்றும் நவக்குமார் ஆகியோர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது இந்த அருமையான தகவலை உணர்வுப்பூர்வமாய் தனக்கே உரிய பாணியில் ஏற்ற இறக்கங்களுடன் நண்பர் பாலபாரதி கூறினார். நல்ல விசயத்தை மனதில் விதைத்த நண்பருக்கு நன்றி.