"என்ன வயசுங்க..?"
"அது ஆச்சு 72.." என்று கடலை வறுத்தபடியே சொன்னார் பெரியவர்.
"ஏன் இந்த வயசுல இப்படி கடப்படுறீங்க..?"
"இதுதான் எனக்கு ரொம்ப சந்தோசம் தருது.." என்ற பெரியவரை ஆச்சரியமாய் ஏறிட்டேன்.
"3 பசங்க, ஒரு பெண்பிள்ளை எல்லோருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன். கடைசி பயனுக்கு கல்யாணம் பண்ணி வெச்ச §¡ட்டோட என் பொண்டாட்டி நிம்மதியா கண்ணை மூடிட்டா. என் பசங்களும் நல்லாதான் கவனிகறாங்க, மருமகமார்களையும் ஒரு குறை சொல்லமுடியாது. உழச்சு பழகுன என் உடம்புக்கு சும்மா இருக்க முடியல, அதான் இப்படி கடலை வண்டியை தள்ளிட்டு வந்தர்றேன். ஆண்டவன் புண்ணியத்துல உங்கள மாதிரி நிறைய பேர் தாயாபுள்ளையா பழகிட்டாங்க, மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.." என்று சொல்லியபடியே ஒரு பொட்டலத்தை எடுத்து ஏக்கமுடன் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியம்மாவிடம் "இந்தாம்மா சாப்பிடு.." என்று கொடுத்தார்.
ஆயிரம் வாட் பல்ப் போட்டமாதிரி அந்த அம்மாவின் முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம்.
ஆச்சரியத்துடன் பார்த்த என்னிடம் "என்னமோ பெரிசா நா செஞ்சுட்டதா நினைக்காதீங்க ஏதோ என்னால முடிஞ்சது" என்று கூறியபடி, வண்டியைத் தள்ளியபடி 'டக..டக..' என்று கடலை வறுத்தபடி நகர்ந்து சென்றார்.
அவர் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு ஏதோ ஞானம் கிடைத்த உணர்வு ஏற்பட்டது.
நிறைய இருந்தால்தான் கொடுப்பேன் என்பதைவிட இருப்பதில் கொடுப்பது எவ்வளவு பெரிய விசயம்.
எவ்வளவு எளிமையாய் மகிழ்ச்சியின் தத்துவத்தை கூறி சென்று விட்டார்.
பெரிதாய் பிறருக்கு உதவி செய்த நினைப்பிலிருந்த எனக்கு சுரீரென்று இருந்தது.